Total Pageviews

Wednesday, September 5, 2012

சமூக வலைத்தளங்களில் படாத பாடுபடும் நடிகர்கள்


இன்றைய நவீன உலகின் வளர்ச்சிக்கு பாரிய வழி வகுப்பது தொழில்நுட்ப வளர்ச்சியே என்பதில் தவறேதுமில்லை. இந்த தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பது என்றுமே கணனி உலகம் தான். நவீன மயப்படுத்தப்பட்ட இந்நாட்களில் கணனியினூடாக செயற்படும் இணையத்தளங்களின் பங்களிப்பானது அளப்பெரியது.

இந்த நிமிடம் தங்கள் கைகளில் ஒரு கணனியும் இணைய வசதியும் உண்டென்றால் நமது தேவைகளை உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே நிறைவேற்றிவிடலாம். இலங்கையைப் பொறுத்தளவில் இணைய உபயோகத்தின் உச்சப் பயனை இதுவரையில் எட்டவில்லை.

ஆனாலும் மேற்கத்தேய நாடுகளை பொறுத்தளவில் இது சாத்தியமாயிற்று. தொழில் முதற்கொண்டு உணவு, வியாபாரம், பொருள்கொள்னவு, வங்கிச் செயற்பாடுகள் என நாமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வகையான தேவைகளையும் இணையத்தின் மூலம் நிறைவேற்றக் கூடியதாக உள்ளது. இதில் ஆச்சரியத்திற்குரிய விடயமாக நாம் காணக்கூடியது பாமரன் முதல் படித்தவன் வரையில் அனைவரும பயன்படுத்தக் கூடியளவில் மாறியதே இணையத்தின் வெற்றி.

இவ்வாறு பல வகையில் மனிதர்களுக்கு மனித வளத்தினை எதிர்பாராமல் உழைக்க உதவும் இணையத்தினால் பாதிப்புக்களும் உண்டு. பாலிலுள்ள நீரினைப் பிரித்தறியும் அன்னத்தின் ஆற்றல் எல்லா பறவைகளுக்கும் இருந்தால் அன்னங்களுக்கு மதிப்பிருக்காதே. அந்த வகையிலே இணையத்தினதும் இணையத்தளங்களினதும் பயன்பாட்டினை உணராதோர் கூட்டம் மதிப்பிழந்து நிற்கின்றது. இந்த கூட்டத்தினர் நம்மிடையே பலர் அவர்களில் சிலர் செய்யும் கோமாளி வேலைகளின் உச்சக்கட்டமே சமூக
இணையத்தளங்களின் மூலம் நடிகர்களை படாத பாடு படுத்தும் கொலை வெறியாட்டம்.

மது, மாது போன்றவற்றிற்கு அடிமையானவர்கள் போல இன்று சமூக இணையத்தளங்களுக்கும் பலர் அடிமைகளாக வாழுகின்றனர். முகப்புத்தகம் (Facebook), ட்விட்டர் (Twitter), கூகிள் பிளஸ் (Google +), ஓர்க்குட் (Orkut), ஹாய் பை (Hi5) என பல சமூக இணையத்தளங்கள் பலருக்கு போதையை ஏற்படுத்துகிறது. இந்த சமூகத் இணையத்தளங்களில் தற்போது அதிக பாவனையாளர்களைக் கொண்டுள்ள இணயத்தளம் முகப்புத்தகமே (Facebook). கணனியின் புரொசருக்கு ஏற்ற அளவிலான எம்.பி (MB ரெம் (Ram) இனை பயன்படுத்துவதே சாலச் சிறந்தது இது போலவே சமூக இணையத்தளங்களினையும் அளவாக பயன்படுத்தினால் தப்பேதுமில்லை.

சில சமூக இணையத்தளப் பாவனையாளர்களின் முழு நாளுக்கான செயற்பாடுகளினையுமே இவர்களின் இணையப் பக்கம் மூலம் அறியக் கூடியதாக இருக்கும். சிலரது தொழில் சமூக இணையத்தளம் சார்ந்ததாகவே இருக்கும் அவர்களை குறை கூறுவதில் அர்த்தமில்லை. ஏனெனில் சில நிறுவனங்கள் சமூக இணையத்தள நிர்வாகி (Social Network Administrator) எனும் பதவியினையை கொண்டுள்ளது இதுவே சமூக இணையத்தளத்தின்
தேவையை பறைசாற்றுகின்றது.

இனி சமூக இணையத்தளத்தின் வெற்றி நாயகன் முகப்புத்தகத்தில் நடக்கும்
கூத்துக்களையும் அநாகரிகத்தின், உச்சிக்கே செல்லும் கோமாளிகளின் விடயத்துக்கும் வருவோம். சமூக இணையத்தளங்களின் தாக்கம் எந்த தொழில்
துறையினருக்கு இருக்கிறதோ இல்லையோ சினிமா துறைக்கு நிச்சயமாக உண்டென்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதற்கு சிறந்த உதாரணம் அண்மைய வை திஸ் கொலவெறி டி பாடலின் வெற்றி.

வை திஸ் கொலவெறி பாடலுக்கான இந்தியா கடந்த வெற்றிக்குக் காரணம் சமூக இணையத்தளமே. முகப்புத்தகத்தில் அதிகளவாக அண்மையில் உரையாடப்பட்ட விடயம் வை திஸ் கொலவெறி என்பதாம் என்றால் பாருங்கள். சினிமாவுக்கு சாதகமான காரணிகள் பல இதில் காணப்பட்டபோதும் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்ளால் ஏனைய சினிமா ரசிகர்களை விட சற்று அதிகமாகவே பாதகமான காரணிகள் தோன்றுகின்றது.

தற்போது ஒரு படத்தின் வெற்றி இவ்வாறான சமூக இணையத்தளங்களிலும்
தங்கியிருக்கிறது. இன்றைய சினிமா ரசிகர்கள் படங்களின் வெற்றியை
முகப்புத்தகத்தின் மூலமே தீர்மானிக்கின்றர். படம் திரைக்கு வந்தால் போதும் படம் பார்க்க ஆரம்பித்தது முதல் வெளியாகும் போது ஏற்பட்ட கலவரம் வரை அவர்களது சுவரில் (Wall) கிறுக்கி விடுவார்கள். இதனால் படத்தின் தன்மையை இலகுவில் ஏனையோர் அறியக்கூடியதாக உள்ளது.

சமூக இணையத்தளங்களில் இவ்வாறு படம் குறித்த தமது கருத்துக்களை வெளியிடும் போது எதிர்மறையான கருத்துக்களும் நிச்சயமாக வெளியாகும். இவ்வாறான குறித்த எதிர்மறையான கருத்துக்களை பெற்ற படத்தின் நாயகனின் ரசிகர்கள் கொந்தளிப்பார்கள். இந்த இடத்திலிருந்தே நடிகர்களின் முதுகில் சனி பகவான் குடிகொள்ளத் தொடங்குவார். கருத்துக்களுக்கு பதிலளிப்பது என நினைத்து உடனே ஆத்திரத்தில் ரசிகர்கள் ரயில்
பெட்டி, கழிவறைச் சுவர்களில் கிறுக்கும் பாணியில் தங்களது இணையத்தள சுவர்களிலும் (Wall) படு கேவலமான முறையில் எதிர் கருத்துக்களை எழுதித் தீர்ப்பார்கள்.

இந்த வார்த்தைப் போட்டி போதாதென்று படங்கள் மூலமும் வேட்கையைத்
தீர்த்துக்கொள்ளுவார்கள் இதில் தான் இன்றைய தலைமுறை நடிகர்கள் பாவமாக தெரிவார்கள். குறிப்பாக அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். இதனால் இவர்களினது திரைப்படங்கள் மட்டுமன்றி சொந்த வாழ்க்கையும் அசிங்கப்படுத்தப்படுகிறது.

தாம் விரும்பும் நாயகனை அரசனாகவும் ஏனைய நடிகர்களை ஆண்டியாகவும் எண்ணி இவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. விலங்குகளின் உடம்பில் நாயகன் ஒருவரின் முகம், ஒரு நாயகன் இன்னொரு நாயகனை கேலி, அடித்துதைப்பது போன்று புகைப்படங்களினை கணனி மூலம் உருவாக்கி அதனை தரவேற்றம் செய்து மகிழ்ச்சியடைகின்றனர்.

இது போதாதென்று தனியாக செயற்பட்டது போதும் குழுவாக செயற்படவென
முகப்புத்தகத்தில் குழுக்கள் (Groups), ரசிகர் பக்கம் (Fan Page) போன்றவற்றினை உருவாக்கி அதன் மூலம் பல பிரதேசங்களிலுமுள்ள தங்களது ஆதரவுகளை
பெருக்கி நாயகர்களின் முகத்தில் கரி பூசுவதாக நினைத்து தங்களுக்கு தாங்களே கரியைப் பூசிக்கொள்கின்றர்.

ஒவ்வொரு ரசிகனுக்கும் படங்களை பற்றி விமர்சிக்க சகல உரிமையும் உண்டு.
இருப்பினும் விமர்சனத்தையும் தாண்டி நடிகர்களிடமுள்ள குறைகளை வைத்து அவர்களை இழிவுபடுத்துவது எவ்வகையிலும் தகாது. இம் மாதிரியான செயல்களால் குறித்த நடிகர்கள் மனதளவில் பாதிக்கபடுகிறார்கள் என்பதற்கு நடிகர் சூரியாவின் கருத்தே நமக்கு விளக்கி நிற்கின்றது.

அண்மையில் நடிகர் சூர்யா இது தொடர்பில் குறிப்பிடுகையில், என்னைப் பற்றியும், என்னுடைய படங்களைப் பற்றியும் ரசிகர்கள் பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் எழுதுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதே வேளையில் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கக் கூடிய சமூக இணையத்தளங்களில் சிலர் அவமதிப்பாகவும், கேலியாகவும் எழுதுகிறார்கள். இதில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். திரைப்படங்களை பார்த்து விட்டு விமர்சிப்பதற்கு ஒவ்வொரு ரசிகருக்கும் உரிமை உண்டு. ஆனால் குடும்பத்தைப் பற்றியும், உறவினர்களைப் பற்றியும் அவதூறாக எழுதுவது
முறையல்ல. என்னைப் பொறுத்தவரை இம் மாதிரியான அவமதிப்புகள் உண்மையான கலைஞனை பாதிக்காது என தெரிவித்திருந்தார்.

என்னதான் சூர்யா இவ்வாறான கேலிகளினை பொருட்படுத்தாது போல் பேசியிருந்தாலும் இதனை ஒரு விடயமாக எடுத்து பேசுமளவுக்கு அவரை பாதித்திருப்பது தெளிவாக தெரிகிறது. எனவே பெருவாரியான மக்கள் பார்க்கும் வகையில் இவ்வாறான இழிச் செயல்களில் ஈடுபடுவோர் இதிலிருந்து விடுபடுவதே சாலச் சிறந்தது.

மேலைத்தேய நாடுகளின் சமூக இணையத்தள தேவைகளோடு ஒப்பிடுகையில் எமது தேவைகள் மிக மிகக் குறைவே. ஆக்கபூர்வமாக சிந்தித்து செயற்பட்டால் நாமும் சமூக இணையத்தளத்தில் சாதிக்கலாம். விளையாட்டாக ஆரம்பித்த முகப்புத்தகம் என்ற சமூக இணையத்தளத்தால் இதன் உரிமையாளர் மார்க் ஷுக்கர் பேர்க் இன்று உலகளவில் பேசப்படுகிறார். ஒருவரின் ஆக்கத்தினை ஏன் அழிவுக்கு பயன்படுத்த வேண்டும்?

பொழுதுபோக்கான சினிமாவை வாழ்க்கையென எண்ணிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் நேரத்தை வீணடிப்பதில் இவர்கள் கண்ட பயன்தான என்ன?.

-ஏ.எம்.ஆர் 

குறிப்பு - அண்மையில் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் எல்லா விடயங்களும் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றவை. இந்த பதிவு ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகையில் பிரசுரமானது என்பதனால் அது அவ்வாறமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.