Total Pageviews

Monday, February 25, 2013

உணவு விஷம் என பரிசோதிக்க 15 பெண்களைப் பயன்படுத்தினார் ஹிட்லர் : பாதிக்கப்பட்ட ஜேர்மனிய பெண் அதிர்ச்சித் தகவல்

ஜேர்மன் நாட்டின் முன்னாள் ஆட்சியாளர் சர்வாதிகாரியான அடோல்ப் ஹிட்லர் உண்ணும் உணவுகளில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என பரீட்சிக்க 15 பெண்களைப் பயன்படுத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹிட்லரின் உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என பரீட்சிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட 15 பெண்களில் ஒருவரான 95 வயதான மார்கொட் வெயல்க் என்ற ஜேர்மனியப் பெண்ணொருவரே மேற்படி தகவலினை வெளியிட்டுள்ளார்.

இப்பெண்ணுடன் சேர்த்து மேலும் 14 பெண்கள் பல வந்தமாக இப்பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். குறித்த இப்பணிக்காக 2 வருடங்கள் மார்கொட் பயன்படுத்தப்பட்டுள்ளார்.

ஹிட்லர் உண்ணும் உணவுகளை அவர் உண்பதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பாகவே குறித்த 15 பெண்களுக்கும் உணவு வழங்கப்படும். அவ்வுணவுகள் அனைத்தும் சைவ உணவுகளாகவே இருக்கும். ஏனெனில் ஹிட்லர் அவற்றையே உண்பார். இவ்வாறே அங்கு நடைமுறை காணப்பட்டது என அப்பெண் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்இ அங்கு வாழவே பயமாக இருக்கும். நாங்கள் உண்ணுகின்ற உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்தால் எங்களின் நிலைமை அவ்வளவுதான். எங்களுக்கென தெரிவுகள் எதுவும் கிடையாது.

இந்த வாழ்க்கையிலிருந்து 1946ஆம் ஆண்டு நான் விடைபெற்றேன். ஒரு மூத்த படை வீரர் என்னை தப்பிக்க வழியமைத்தார். ஏனைய பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன். அவர்கள் யாரும் இத்தகவலை வெளியிடவில்லை.

மேலும் படை வீரர்களால் நான் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்டேன். இதன்போதும் பொறுமையுடன்  துன்பங்களுக்கு  முகம்கொடுத்தேன் என தெரிவித்துள்ளார்.

ஹிட்லர் மறைவிற்கு பின்னர் அவரைப் பற்றி ஏற்கனவே பலதரப்பட்ட அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் புதிதாக இத்தகவல் வெளியாகியுள்ளது.

By AM. Rizath/Metro News