சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Monday, May 20, 2013

புவியை கடந்து செல்லும் மற்றுமொரு விண்கல் 'QE2'

'QE2' எனப் பெயரிடப்பட்டுள்ள விண் கல் ஒன்று இம்மாத இறுதியில் பவியை கடந்து செல்லவுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல்லானது கேம்பிரிட்ஜிலுள்ள மைனர் கோள் நிலையத்தினாலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லின் நீளம் 1.7 மைல் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 31ஆம் திகதி இரவு 959 மணிக்கு பூமியிலிருந்து சுமார் 3.6 மில்லியன் மைல் தொலைவில் புவியை இவ்விண்கல் கடந்து செல்லவுள்ளது. மேலும் இவ்விண்கல்லினால் புவிக்கு ஆபத்துகளும் ஏற்படாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ்விண்கல் தொடர்பாக மேலதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு தாம் ஆர்வமாக உள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் பிரதம ஆராய்ச்சியாளர் கலாநிதி லேன்ஸ் பென்னர் கூறியுள்ளார்.

இவ்விண்கல் முதன் முதலில் 1998ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 9ஆம் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By AM.Rizath/Metronews

Friday, February 22, 2013

அகிலத்தை அச்சுறுத்தும் அஸ்டரொய்ட்டுக்கள் : விஞ்ஞானிகளை விஞ்சுகிறது!


எதிர்பார்ப்புக்குரிய விருந்தாளியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அழையா விருந்தாளியாய் எதிர்பாராமல் வந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது போல் அமைந்துவிட்டது ரஷ்ய வான் பரப்பில் வெடித்துச் சிதறிய எரிகல் விடயம்.

கடந்த 15ஆம் திகதி வானியல் தொடர்பான அத்தனை பேரும் 2012 DA14 என்ற அஸ்டரொய்ட் தொடர்பாக கவனம் செலுத்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் பிரதேசத்திலுள்ள யுரல் மலைத்தொடரின் மேலாக அழையாக விருந்தாளியாக வந்த எரிகல்லொன்று வெடித்துச் சிதறியது. கூடவே விஞ்ஞானிகளின் கணிப்புக்களும் தான்.

எரிகல் வெடித்த குறித்த பகுதியில் மக்கள் சனத்தொகை மிகக் குறைவு என்பதனால் ஆபத்துக்கள் குறைவாவே ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு எரிகல் வெடித்ததில் சிறு காயங்கள் உட்பட 1200 மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகினர். இதில் மூவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து பாரிய தொழிற்சாலையொன்றின் 6ஆயிரம் சதுர அடியுடைய கூரையொன்று முற்றாக சேதமடைந்துள்ளது. மேலும் அப்பகுதியிலுள்ள ஏராளமான வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கூரைகளும் ஆங்காகங்கே நொறுங்கிக் காணப்படுகின்றது என ரஷ்யாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வானிலிருந்து வேகமாக வந்த எரிகல்லானது புவிலிருந்து சுமார் 50 கி.மீ. உயரத்தில் பாரிய சத்தத்துடன் தீப்பிளம்புகள் பிரம்மாண்டமாக வெடித்துள்ளது. இதில் சுமார் 32 மைல் பரப்பில் துகள்கள் சிதறியுள்ளது. இதன்போது யுரல் மலைப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் அதிர்வுக்குட்பட்டுள்ளது.

இவ்வதிர்வுகளினால் அப்பகுதியிலுள்ள பெரும்பாலான கட்டிடங்களின் கண்ணாடிகள் வெடித்துள்ளது. இதனாலேயே அங்குள்ள பெரும்பாலானர்வர்கள் காயங்களுக்குள்ளாகினர்.

ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்த்தால் இந்த எரிகல் ஆபத்தானது தான் என்றாலும் பெரியளவில் ஆபத்து என்று சொல்லுமளவிற்கு இல்லை என எண்ணிவிட வேண்டாம். வானில் வெடித்த அதே எரிகல் புவின் மேற்பரப்பில் மோதி வெடித்திருக்குமானால்.... நினைத்துப் பார்க்கவே முடியாதுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சுமார் 68 வருடங்களுக்கு முன்னர் 2ஆம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஸிமா நகரை உலுக்கியது 'சின்னப் பையன் (Little Boy)' எனும் அணுகுண்டு. இதன் தாக்கம் சொல்லிப் புரியவேண்டியதில்லை. வருடா வருடம் அணுகுண்டு வெடித்த தினமான ஓகஸ்ட் 6ஆம் திகதியை கொண்டாடியே உலகிற்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது ஜப்பான்.

அமெரிக்காவின் அதி புத்திசாலித்தனமான வேலையில் அணு விதைக்கப்பட்ட ஹிரோஸிமாவின் பூமியில் இன்றளவிலும் வீரியமிக்க அடுத்த சந்ததியின் விதைகளான குழந்தைகள் உருவாக முடியாமலே உள்ளது. 

இவ்வாறு ஹிரோஸிமாவை உலுக்கிய அணுகுண்டைப் போன்று 30 மடங்கு அதிக வலுவுடைய எரிகல்லே ரஷ்யாவின் வான் பரப்பில் வெடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ரஷ்யாவின் 1908ஆம் ஆண்டில் பாரிய எரிகல் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1200 வருடங்களுக்கு ஒரு முறை பாரிய வெடிப்பில் ஒரு சம்பவமே அது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எரிகல்லிற்கு காசு
இந்தளவிற் ஆபத்தை விளைவிக்கக் கூடிய எரிகல் என்பதனால் ஆராய்சிக்காக இக்கல்லிற்கு ஆராய்ச்சியாளர்களிடையே கேள்வி நிலவுகின்றது. வெடித்து எரிகல்லின் சிதறல்கள் கிடைக்கப்பெற்றவர் அவற்றை விற்பனை செய்துள்ளனர். சுமார் 6500 அமெரிக்க டொலர்கள் வரை விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியானது.

இதனால் குறித்த பிரதேசத்திற்கு எரிகல் வேட்டைக்கென ஏராளமானவர்கள் வந்துள்ளனர். இதனை ரஷ்ய பாதுகாப்புப் படை தடை செய்துள்ளதுடன் கல்லினை வெறுங் கையினால் தொடுவதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளனர்.

ஆபத்துக்கள் எதுவுமின்றி புவியைக் கடந்தது அஸ்டரொய்ட் 2012 DA14 
இதேவேளை அன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட் 2012 DA14 எனும் அஸ்டரொய்ட் பூமிக்கு எதுவித ஆபத்துக்களையும் ஏற்படுத்தாமல் புவியைக் கடந்து சென்றது.

பூமிக்கு மிக அண்மையாக அஸ்டரொய்ட் ஒன்று கடந்து செல்லும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது. எனவே இக்கல் புவியைக் கடக்கும் போது அஸ்டரொய்ட் தொடர்பான ஆராய்ச்சிகளும் அடுத்த கட்டத்திற்கு நகரும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

150 அடி நீளமானதும் 130,000 தொன் நிறையுடையதுமான (உதை பந்தாட்ட மைதானத்தின் பாதி அளவு) 2012 DA14 அஸ்டரொய்ட், சுமாத்ரா தீவிற்கு மேலாக கடந்த 15ஆம் திகதி இரவு சுமார் 11.55 மணியளவில் 28,000 கி.மீஃமணி வேகத்தில் புவியுடன் மோதாது சுமாத்ரா தீவுகளுக்கு மேலாக 27,700 கி.மீ தூரத்தில் புவியைக் கடந்து சென்றுள்ளது.

ஆய்வாளர்களின் கணிப்பினை பொய்யாக்காமல் குறித்த அஸ்டரொய்ட் புவியைக் கடந்தது. இதன் பின்னர் உண்மையில் இக்கல் புவியை மோதுவதற்கு மிகச் சிறியளவில் வாய்ப்பு இருந்தது. அவற்றை நாங்கள் வெளியிடவில்லை என விஞ்ஞானிகள் கூறினர் எனத் தகவல்கள் வெளியாகின.

மேலும் இவ் அஸ்டரொய்ட் பூமியில் மோதியிருந்தால் 800 அடிக்கும் மேல் சுனாமி ஏற்பட்டிருக்கும். மேலும் மீண்டும் சின்னப் பையனுடனேயே இதுவும் ஒப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2012 DA14 அஸ்டரொய்ட் புவியுடன் சின்னப் பையன் அணுகுண்டினை விட 1000 மடங்கு ஆபத்தை விளைவித்திருக்கும் என விஞ்ஞானிகள் தெரவித்துள்ளனர்.

வருடத்திற்கு ஆகக் குறைந்தது 500 ஆயிரம் அஸ்டரொய்ட்டுக்கள் பூமியைக் கடந்து செல்கிறது. இவற்றில் ஒரு சிலவற்றை விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்க முடிகிறது நாசாவினையும் சேர்த்து. 2012 DA14 அஸ்டரொய்ட் ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் நாசா இது தொடர்பில் மக்களுக்கு அறிய உதவியிருந்தது. அத்துடன் 2012 DA14 அஸ்டரொய்டின் நகர்வினையும்  http://eyes.nasa.gov/index.html என்ற இணையத்தளத்தில் நேரடியாக காண வழிசெய்தமை குறிப்பிடத்தக்கது. (இந்த அஸ்டரொய்ட் தொடர்பில் 2013.02.08ஆம் திகதி மெட்ரோவில் பார்க்கலாம்.)

இந்த இரண்டு விடயங்களையும் ஒப்பிடுகையில், அஸ்டரொய்ட்டுக்கள் மற்றும் எரிகற்கள் என்ற விடயம் தொடர்பில் விஞ்ஞானிகளின் நிலைப்பாடுதான் என்ன? என பொதுவான ஒரு கேள்வி எழச் செய்வதைத் தவிர்க்க முடியவில்லை என்பது உண்மைதான்.

இந்நிலையில் அஸ்டரொய்ட்டுக்கள் மற்றும் கற்களை அவதானிக்கவும் அவற்றிலிருந்து புவியை காக்கவும் புதிய சட்டலைட் மூலம் சூரியக் கதிர்கள் மூலம் கற்களை அழிக்கும் நடவடிக்கைகளை தற்போது புதிதாக முன்னெடுக்க அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தயாராகி வருகின்றனர்.

எனவே எதிர்வரும் நாட்களிலும் பல்லாயிரக் கணக்கான கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி பாய்ந்து வந்து கொண்டிருக்கும் அஸ்டரொய்ட்டுக்களுக்கு விஞ்ஞானத்தின் விடை என்ன என்பதை பொறுத்திருந்து பார்போம்.

அமானுல்லா எம். றிஷாத்

இக்கட்டுரையானது மெட்ரோ நியுஸ் பத்திரிகையில் 22.02.2013 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 13, 2013

நாளை பூமியை நெருங்கும் மற்றுமொரு அஸ்டரொய்ட்! : பூமியுடன் மோதுவற்கு வாய்ப்பே இல்லை


காதலில் காதல் கொண்டவர்கள் காதலர் தினத்தினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில் விண்வெளியில் காதல் கொண்ட விண்வெளி ஆய்வாளர்களோ அதற்கடுத்த நாளானான பெப்ரவரி 15ஆம் திகதிக்காக ஆவலாய் காத்திருக்கிறார்கள்.

அன்று பூமிக்கு மிக அண்மையாக 2012DA14 அஸ்டரொய்ட் எனப்படும் பறக்கும் கல்லொன்று பூமியைக் கடந்துசெல்லவுள்ளது. இதனை எதிர்நோக்குவதற்காக பல்வேறு நாட்டிலுமுள்ள விண்வெளி ஆராய்வாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனா.

ஏனெனில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இது போன்ற ஒரு சம்பவம் நிகழும் அதேவேளை 1200 வருடங்களுக்கு ஒரு முறை மோதல் அல்லது வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முதல் 1908ஆம் ரஷ்யாவில் ஒரு பகுதியில் அவ்வாறானதொரு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இருப்பினும் பெப்ரவரி 15ஆம் திகதி அவ்வாறெல்லாம் எந்தவொரு அசம்பாவிதமும் இடம்பெறாது. என்றாலும் பூமியுடன் மிக நெருக்கமாக பறக்கும் கல்லொன்று கடந்து செல்லும் இவ்வாறானதொரு அரிய சந்தர்ப்பத்தினை நழுவவிட விஞ்ஞானிகள் யாரும் தயாரில்லை. ஏனெனில் 2046ஆம் ஆண்டிலேயே கல்லொன்று பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும்.

பூமியை மிக மிக அண்மையில் கடந்து செல்லவுள்ள 2012DA14 என்றழைக்கப்படும் அஸ்டரொய்டானது கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது குறித்த அஸ்டரொய்டானது பூமியை கடந்து சென்று 7 நாட்கள் ஆகிவிட்டது. இதன் பிறகே இந்த அஸ்டரொய்ட் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கண்களுக்கு தென்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சிகளின்போதே இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் அறிவியல் உலகிற்கு தெரியவந்தது.



2012DA14 அஸ்டரொய்ட் வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி பூமியை அதன் மேற்பரப்பிலிருந்து வெறும் 27,700 கீ.மீ. (பூமியின் மத்தியிலிருந்து 34,100 கீ.மீ) தூரத்தில் கடந்து செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2012DA14 இனை ஒத்த அளவுடைய ஒரு அஸ்டரொய்ட் மிக நெருக்கமாக கடந்து செல்லும் முதல் சந்தர்ப்பமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

27,700 கீ.மீ. என்பது சாதாரணமாக எமக்கு பெரியதோர் தூரமாக தெரியலாம். ஆனால் இது விண்வெளி சம்மந்தமான ஆய்வுகளுடன் ஒப்பிடும் போது மிக மிக கிட்டிய தூரமே. அத்துடன் தொலைக்காட்சி, ஜீ.பீ.எஸ் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படும் செயற்கை கோள்கள் அமைந்துள்ள தூரத்தினை விட இது குறைவாகும்.

இந்தளவிற்கு அண்மையில் வரும் போதிலும் ஏறத்தாள 45 மீற்றர் அகலாமனதும் 130 ஆயிரம் மெற்ரிக் தொன் நிறையுடைதுமான ஒரு காற்பந்து மைதானத்தின் பாதி அளவுடைய இந்த அஸ்டரொய்டினை வெற்றுக் கண்ணால் அவதானிக்க முடியாது. . பைனா குலர் மற்றும் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் போன்றவற்றினாலேயே பார்க்கமுடியும் .

கிழக்கு இந்தியப் பெருங்கடலில் இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுக்கு மேலாக 27, 700  கீ.மீ. தூரத்தில் முற்பகல் 11.55 மணிக்கு பூமியை 17,450 மைல்/மணி வேகத்தில்  கடந்து செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அரிச சந்தர்ப்பந்தினை எல்லோரும் பார்க்கும் விதமாக நாஸா இணைத்தினூடாக ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக  http://eyes.nasa.gov/index.html எனும் பக்கத்தை ஆரம்பித்துள்ளது. இதன் கல்லின் அசைவுகளை நேரடியாக காணலாம்.

ஏற்கனவே 2012DA14 அஸ்டரொய்டானது ஜனவரி 9ஆம் திகதி பூவியை கடந்து செல்லும் என கணிக்கப்பட்டிருந்தது. தற்போது பெப்ரவரி 15ஆம் திகதியன்றே இச் சம்பவம் நடைபெறும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இக்கல்லானது எந்த சந்தர்ப்பத்திலும் பூமியுடன் மோதுவதற்கு வாய்ப்பே இல்லை என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெள்ளத் தெளிவாக தெரிவித்துள்ளது.

இது குறித்து நாசா விஞ்ஞானி கலாநிதி டொன் யொமன்ஸ் கருத்து வெளியிடுகையில், இந்த கல்லின் பயணம் எவ்வாறு அமையும் என்பதுடன் நிச்சயமாக பூமியுடன் மோதவும் மாட்டாது என்பது உறுதி.

ஆனால் வரலாற்றில் அறிந்தவகையில் 2012DA14 அஸ்டரொய்ட் அளவிலான அஸ்டரொய்ட் ஒன்று பூமியை மிக நெருக்கமாக கடக்கும் அஸ்டரொய்ட் இதுவே. எனவே இதன் மீதான ஆராய்ச்சிகள் பிற்காலத்திற்கு உதவியாக இருக்கும்.




உண்மையில் ஒரு வருடத்தில் இதே மாதிரியான ஏறத்தாள 500 ஆயிரம் அஸ்டரொய்ட்டுகள் பூமியை நெருங்கிச் செல்கின்றது. ஆனால் அவை அனைத்தையும் எம்மால் அவதானிக்க முடிவதில்லை என்றார்.

இந்த அஸ்டரொய்ட் பூமியை நெருங்கும் வேளையில் நாசா அதனுடன் தொடர்புகொள்ளும் நடவடிக்கைகள் அத்தனையை தற்போது பூர்த்தி செய்துள்ளதாகவும் இதனால் பூமிக்கு ஆபத்தோ வெடிப்பு மற்றும் மோதல் சம்வங்களோ இடம்பெற மாட்டாது என நாசா தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் இன்னும் சில நாட்களில் பூமி சந்திக்கவுள்ள இந்த அஸ்டரொய்டினால் பூமி நிச்சயமாக அதிரமாட்டாது என்பது தெளிவாகிறது. ஆனாலும் இது தொடர்பிலான வதந்திகள் பூமியை குறிப்பாக எமது பிராந்தியங்களை அதிரச் செய்யலாம். எனவே முடிந்த வரை உண்மைகளை உரைப்போம் வதந்திகளை மறைப்போம்.



-அமானுல்லா எம். றிஷாத்

Friday, December 14, 2012

நிபிறு போனாலென்ன...? அஸ்டரொய்ட் வருதே!


உலக அழிவு, மாயன் நாட்காட்டி, நிபிறு, மூன்று நாள் இருள் என ஏகப்பட்ட கதைகள் கட்டுக்கதைகளாக இருந்தாலும் கட்டுக்கடங்காமல் மனிதர்களிடையே பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் வரும் 22ஆம் திகதி காலையில் விழித்தெழும் போது அந்த வதந்திகள் எல்லாம் கனவாய் கலைந்துவிடும்.

21ஆம் திகதிக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இருப்பினும் இதுவரையில் ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு கோளும் தென்படவில்லை எனவே நிச்சயம் நிபிறு என்பதெல்லாம் நிச்சயிக்கத்தக்க வதந்திகளே என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

இன்னும் நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் பூவியை நோக்கி வரும் எரிகற்கள், கோள்கள், வால்நட்சத்திரங்ளை கண்டுபிடிக்கப்பிடிக்க முடியுமென்றால் அண்மையில் பூமியை தாக்கவிருக்கும் நிபிறு மட்டும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விடயமா? என்று எதிர்க் கேள்வி எழுப்பிகிறார்கள் ஆய்வாளர்கள்.

சரி அவ்வாறெனில் டிசம்பரில் ஏதாவது அசம்பாவிதங்கள் பூமியில் இடம்பெறுமா என்றால் நிச்சயமாக இல்லை என அடித்துக் கூறுகிறது நாசா. நிபிறு பிரளயம் மூலம் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஆசாமிகள் பரப்பாத உண்மையான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது நாசா. 

அதாவது பிறக்கவிருக்கும் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி பூமியை தொடாத குறையாக அஸ்டரொய்ட் ஒன்று மிக நெருக்கமாக புவியை கடந்து செல்லவிருக்கிறது. ஆனால் இந்த அஸ்டரொய்ட் புவியுடன் நிச்சயமாக மோதாது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பறக்கும் கற்கள் எனப்படும் அஸ்டரொய்ட்டுக்கள் புவியைக் கடந்து செல்வது சாதாரண விடயம்தான் என்றாலும் கடந்த பல நூறு ஆண்டுகளில் எந்த அஸ்டரொய்ட்டும் இப்போது வரவுள்ள அஸ்ட்ரொய்டினை போன்று மிக நெருக்கமாக கடந்து சென்றதில்லை என்பதுவே அசாதாரணம். 

ஒவ்வொரு மாதமும் பல அஸ்டரொய்ட்டுக்கள் புவியை கடந்து சென்றுகொண்டே இருக்கிறது. நடப்பு மாதத்தில் கூட 3 அஸ்டரொய்ட் புவியை கடந்து செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உண்மையில் அஸ்டரொய்ட்டுக்கள் என்பது கோள்களிலிருந்து பல்வேறு காரணங்களால் பிளவடைந்து அண்டவெளியில் சுற்றித் திரிகின்ற கற்கள் போன்றவொரு அமைப்பே. சில வேளைகளில் புவியின் ஈர்ப்புசக்தியினால் புவியை நோக்கி வரவும் பிளவடைவதற்கும் சாத்தியமுண்டு. 

இவ்வாறு உடைபடும் கோள்கள் ஒரு சுற்று பாதையில் சுற்றி வரும் அப்போது புவிக்கு அண்மையாகவோ தூரமாகவோ அமையும், சில வேளைகளில் பூமியில் வந்து விழும். இவை பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. 

வரும் பெப்ரவரி 15ஆம் திகதி 2 அஸ்டரொய்ட்டுக்கள் புவியை கடந்து செல்லவுள்ளது. இதில் 1999 YK 15 எனப்பெயரிடப்பட்ட ஒன்று புவியிலிருந்து 2 கோடி கிலோ மீற்றர் தொலைவில் செல்லும் அதேவேளை, 2012 DA 14 என பெயரிடப்பட்டுள்ள 48 மீற்றர் நீளமான மற்றய அஸ்டரொய்ட் ஒரு கட்டத்தில் புவிக்கு அண்மையில் அதாவது 24 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தில் பயணிக்கவுள்ளது. இதுவே சற்று பீதியை கிளப்புகிறது.

24 ஆயிரம் கிலோ மீற்றர் என்பது அதிக தூரமாச்சே! மேலும் இதன் அளவினை பூமியுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இதன் நீளம் வெறும் 48 மீற்றர்களே எனவே இதனால் என்ன பாத்திப்பு ஏற்பட்டுவிடப்போகிறது என எமக்கு தோன்றினாலும் விண்வெளி அலகினைப் பொறுத்தவரையில் இது மிக மிக குறைந்த தூரம். அத்துடன் புவியிலிருந்து அண்ணளவாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் ஏராளமான இணைச்சுற்று செயற்கைக் கோள்கள் (Geostationary satellites) வலம்வருகிறது. 

இவ்வாறு வலம் வரும் கோள்களுக்கும் புவிக்குமிடையில் குறித்த அஸ்டரொய்ட் பயணிக்கும் போது அதன் வேகம் மணிக்கு ஏறத்தாள 22 ஆயிரம் கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் இதன்போது மோதல்கள் இடம்பெற்றால் பாரியளவில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என அச்சப்படுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் ஒரு வேளை இந்த அஸ்டரொய்ட் பூமியுடன் மோதுண்டால்... உண்மையில் அது மோதலாக இருக்காது அதாவது ஒரு குட்டையில் கூழாங் கல்லொன்று விழுவதற்கு ஒரு மனிதன் குதிப்பதற்கு இடையிலான வித்தியாசத்தை போன்றதே அது. எனவே இந்த அஸ்டரொய்ட்டின் பருமனின் அடிப்படையில் நோக்கினால் பூமியில் விழுந்தால் என்னவாகும் என்பதே சாலப்பொருத்தமாக இருக்கும்.

ஆனாலும் இந்த 2012 DA 14 அஸ்டரொய்ட் பயணிக்கும் வேகம் பல்லாயிரக் கணக்காக மீட்டராக இருக்கும் மேலும் இதன் நிறை சுமார் 5 இலட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதனால் நிலப்பகுதியில் விழுந்தால் ஒரு கிராமம் அழியலாம் தவிர வேறு எந்த பாதிப்பும் வராது என எதிர்வுகூறப்படுகிறது.

இதுவரையில் 1353 அஸ்டரொய்ட்டுகளை பற்றிய முழுமையான தகவல்களை தன்வசம் வைத்துள்ளது நாசா. இருப்பினும் பெப்ரவரியில் வரவிருக்கும் குறித்த அஸ்டரொய்ட்டுக்கள் தொடர்பாக ஸ்பெயின் நாட்டிலுள்ள விண்வெளி ஆய்வுகூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியமாக உள்ளது. யானைக்கும் அடி சறுக்கும் என சும்மாவா சொன்னார்கள் என்பது போல அமைந்திருக்கிறது இந்த சம்பவம்.

பூமியைப் போலவே, இந்த 2012 DA 14 அஸ்டரொய்ட்டும் சூரியனைச் சுற்றிவருகிறது. இதற்கு முறையே 365.24 நாட்களும் 365.24 நாட்களையும் எடுத்துக்கொள்கிறது. மேலும் இவற்றின் சுற்றுப்பாதைகளும் அருகருகே உள்ளது.

இதனால் ஆண்டுக்கு இருமுறை புவியை கடந்து செல்லுகின்றது. கடந்த முறை புவியை கடந்து செல்லும் போது பூமிக்கும் குறித்த அஸ்டரொய்ட்டுக்குமிடையிலான தூரம் சுமார் இருநூற்றி ஐம்பதாயிரம் கிலோ மீட்டராக இருந்தது. 

இவ்வாறு பல்லாண்டு காலமாக புவியைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் அஸ்டரொய்ட்டானது இப்போது பூமியில் வந்து விழுவதற்கு வாய்ப்பே கிடையாது. மேலும் இந்த அஸ்டரொய்ட்டினால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என அடித்துக் கூறுகிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.

2012 DA 144 அஸ்டரொய்ட்டு பூமியை கடந்து செல்லும் காட்சியைக் விஞ்ஞானிகள் பலர் அமெரிக்காவில் மத்திய புளோரிடா பல்கலைக் கழகத்தில் ஒன்றுகூடி காண்பத்றகு ஆயத்தமாகவுள்ளனர். இந்த அஸ்டரொய்ட்டினை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. இதனால் சக்திமிக்க பைனகுலர்ஸ் மற்றும் டெலஸ்கோப்பினூடாகவே காண முடியும் எனக் கூறப்படுகிறது.

தொடரும் உலக அழிவு தொடர்பான பீதிகள்... 

முடியுமானால் பார்த்து ரசிக்க வேண்டிய இந்த அரிய காட்சியை உலக அழிவு என்ற வதந்தியுடன் சேர்த்து பீதியை கிளப்ப இப்போதே சிலர் ஆயத்தமாகிவிட்டார்கள். 

இவ்வாறனவர்களினால் ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இன்னும் சில ஐரோப்பா நாடுகளிலும் மக்களிடையே வீணான அச்சத்தினால் சில மூடநம்பிக்கைககள் தளைத்தோங்க ஆரம்பித்துள்ளது. 

குறிப்பாக பிரான்ஸ் நாட்டின் தெற்கு பிரதேசத்தில் உள்ள பேர்காஜ் எனும் ஊரிலுள்ள மலை ஒன்றின் மேல் வேற்றுக் கிரகவாசிகளினால் ஒரு விண்கலம் அனுப்படும் அதில் இடம் கிடைக்கும் மனிதர்கள் மட்டுமே உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கை ஐரோப்பிய நாடுகளில் பரவிக்கிடக்கின்றது.

இதனால் அந்த ஊரிற்கு ஏராளமானவர்கள் கடந்த சில வாரங்களாக குடிபெயர ஆரம்பித்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டில் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்வூருக்குள் வெளியாட்களை அனுமதிப்பதனை தவிர்க்க பாதுகாப்புப் படையினரை குவித்துள்ளது பிரான்ஸ் அரசாங்கம். இதேபோல இங்கிலாந்திலும் ஒரு இடத்தில் மக்கள் கூடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கையின் சில பாகங்களிலும் பறக்கும் கற்கள் 

வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள நம்பிக்கைகள் எம்மவர்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதனை தவிர்க்க முடியவில்லை என்பது நிதர்சனம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கம்பஹா, அநுராதபுரம் மற்றும் சில பகுதிகளில் பறக்கும் கற்கள் எனப்படும் அஸ்டரொய்ட் போன்ற வகையான கற்கள் வானத்தில் தென்பட்டு வருகின்றது.

ஆனாலும் இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இது போதாதா? வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவலாய் சிக்கியுள்ளது இந்த பறக்கும் கற்கள். தற்போது இவர்கள் தங்களது விருப்பத்திற்கு புரளியை அள்ளி வீச ஆரம்பித்துவிட்டார்கள்.

எனவே அவ்வாறானவர்கள் போலி வார்த்தைகளை நம்பி அவற்றை ஏனையோரிடமும் பரவச்செய்து 22ஆம் திகதி விடியும் இனிய பொழுதில் வெட்கித்து நிற்பதை தவிர்க்க முயற்சிப்போம்!

-அமானுல்லா எம். றிஷாத் https://www.facebook.com/rizathstar

இன்றைய மெட்ரோ நியூஸ் பத்திரிகை மற்றும் வீரகேசரி இணையத்தளத்தில் வெளியாகியுள்ள எனது மற்றுமொரு ஆய்வுக் கட்டுரையே இது  "நிபிறு போனாலென்ன...? அஸ்டரொய்ட் வருதே!"