Total Pageviews

Friday, November 30, 2012

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு கிடைக்கின்ற ஒவ்வொரு வெற்றிக்கிக்கும் உந்துசக்தியாகின்றது. அவ்வகையில் ஒவ்வொரு தேவைக்குமான மாற்றீட்டினை கண்டுபிடித்து வரும் அறிவியல் உலகத்தில் பூமிக்குரிய மாற்றீடு என்ன? என்ற தேடலும் முக்கியமான ஒன்று.

பல வருடங்களாகவே நடைபெறும் இந்த தேடலின் மற்றுமொரு வளர்ச்சியே கெப்ளர் விண்கலம். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பூமியை போன்ற உயிரினங்கள் வாழக்கூடிய கிரகத்தினைத் தேடி கெப்ளர் எனும் விண்கலத்தினை அண்டவெளியில் தீவிரமாக அலையவிட்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அண்டவெளியை கெப்ளர் போட்டுத் தேடிப்பார்த்தும் புவியை ஒத்த எந்த கிரகமும் இதுவரையில் சிக்கவில்லை. ஆனாலும் கிடைக்கிறது - என்றைக்குமே கிடைக்காமல் இருக்காது என்ற நம்பிக்கையில் தொடர்கிறது ஆய்வாளர்களின் ஆராய்ச்சிகள்.

ஏன் குறிப்பாக பூமி மாதிரியான ஒரு கிரகத்தினை ஆய்வாளர்கள் தேடியலைகிறார்கள்? மனித சனத்தொகை வளர்ச்சியானது 1950ஆம் ஆண்டுகளில் பின்னர் படுவேகமாக ஜே வடிவில் வளர்ந்து இன்று சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி அண்ணளவாக 7.1 பில்லின்கள் ஆகும். இதுவே 2025ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் 8 பில்லினுக்கும் (8,000,000,000) அதிகமாகிவிடும் என்கிறது ஆய்வுகள்.

இதனால் காலப்போக்கில் மனிதனின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவுசெய்வதே சாதனைக்குரியனவாய் மாறிவிடும். நீர், நிலம் மற்றும் வாயு போன்றவற்றுக்கே தட்டுப்பாடு நிலவலாம். ஏனெனில் அதிகரித்துவரும் சனத்தொகையினால் இவைகள் வெகுவிரைவாகவே மாசடைந்து விடும்.

எனவே மனித குலத்தினை காப்பாற்றுவதனை நோக்காக கொண்டே வேற்றுக்கிரக வாசிகள் மற்றும் பூமியை ஒத்த கிரகங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மனிதர்களின் மாதிரியிலமைந்த வேற்றுக்கிரகவாசிகள் புவியை ஒத்த கிரகத்திலேயே இருப்பார்கள் என்பது விஞ்ஞானிகள் நம்பிக்கையிலமைந்த எதிர்பார்ப்பே.

சூரிய மண்டலத்திலிருக்கும் ஒன்பது கிரகங்களில் எதிலும் உயிரினங்கள் வாழத் தேவையான கூறுகள் எதுவும் இல்லை. இதனாலேயே அண்டவெளியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகங்களில் பூமி மாதிரியான கிரகங்கள் இருக்கின்றனவா? என்று அறிய கெப்ளர் விண்கலத்தினை அண்டவெளியில் உலவவிட்டிருக்கிறார்கள்.

உண்மையில் புவியை ஒத்த கிரகம் என்பது அளவில் ஒத்திருப்பதோ சூரினைச் சுற்றி வரவேண்டும் என்பதோ இல்லை. தட்ப வெப்ப நிலைகள், காற்று மண்டலம், காற்றழுத்தம், நட்சத்திரத்திற்கும் கிரகத்திற்குமிடையிலான தூரம் மற்றும் இன்ன பிற காரணிகள் போன்றன புவியை ஒத்திருக்க வேண்டும். அதாவது மனிதன் வாழ ஏதுவான காரணிகள் காணப்படவேண்டும்.

சாதாரணமாக எடுத்துக்கொண்டால் புவியிலுள்ள அந்தாட்டிக்கா பிரதேசத்திலேயே எம்மால் வாழ முடியாது காரணம் அங்கு நிலவும் குளிரான சூழல். இசைவாக்கமடைந்தால் முடியுமே என நாம் எண்ணக்கூடும். அவ்வாறில்லை மீனுக்கு நீச்சல் கற்றுத்தரத் தேவையில்லைதான் ஆனால் அது தண்ணீரில் மட்டுமே சாத்தியம்!

சரி, ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்களின் நிலைமைகள் என்னவென்று பார்ப்போமானால் வெள்ளிக் கிரகமானது புவியின் அளவை ஒத்தது என்றாலும் தீம்பிளம்பு போல சூடாக உள்ளதுடன் கூடிய காற்றழுத்தம் காரணமாக இங்கு செல்லும் விண்கலங்களே சுக்குனூறாக வெடித்துச்சிதறும். புதன் கிரகத்திலோ வெப்பமும் குளிரும் அசாதாரணமாக மாறி மாறி வருகின்றது.

இதேவேளை புவிக்கு அடுத்து வரும் செவ்வாய் கிரகமே தற்போது அதிக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. அங்கு நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கூட காணப்பட்டுள்ளதாக அண்மையில் கியூரியோசிட்டி விண்கலம் மூலம் கண்டுபிடிக்கபட்டது. ஆனாலும் அங்கு காணப்படும் குளிர் விபரீதமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

செவ்வாய்க் கிரகத்திலேயே குளிர் வாட்டுகிறது என்றால் சூரியனிலிருந்து தூரம் அதிகரித்துச்செல்லும் வழியிலுள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளுட்டோ போன்ற கிரகங்களின் நிலைமைகளை சிந்திப்பார்க்கவே முடியாதுள்ளது. மிகக் குறைந்த காற்றழுத்தம் காரணமாக அவையெல்லாம் ஐஸாக உறைந்து காணப்படுகிறது.

இவை தவிர பூமியில் காணப்படும் காற்றுமண்டலமானது ஆபத்தான புற ஊதாக்கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள் ஆகியவற்றை தடுத்து நிறுத்துகிறது. மேலும் சூரியனிலிருந்து, தகுந்த தட்ப வெப்ப நிலைகள் கிடைக்கும் தூரத்தில் உள்ளதுடன் பூமி தகுந்த வேகத்தில் சுழல்வதனால் இரவும் பகலும் தேவையான அளவில் கிடைக்கிறது. இல்லையேல் எமக்கும் ஒரு பக்கத்தில் வாட்டப்படும் உணவு வகைகளின் நிலைமைதான்.

சந்திரன் சூரியனிலிருந்து சரியான தூரத்தில் காணப்படுகின்ற போதும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் காப்பு சந்திரனில் இல்லை. அத்துடன் தொடர்ந்து 14 நாள் வெயில் பின்னர் 14 நாள் குளிர் என இருப்பதனால் மனிதன் வாழ சந்திரனும் உகந்தாக இல்லை.

இவ்வாறு உயிரினங்கள் வாழ ஏதுவாக புவி திடமாக உள்ளது போல் ஞாயிற்றுத் தொகுதியில் வேறு கிரகங்கள் இல்லை என்பதே தற்போது வரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கெப்ளர் விண்கலம் இதுவரையில் சுமார் நூற்று ஐம்பது ஆயிரம் கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. இதில் சில கிரகங்கள் - அது சுற்றும் சூரியன் போன்ற நட்சத்திரத்திலிருந்து புவி அமைந்துள்ள தூரத்தை ஒத்த தூரத்தில் காணப்படுகிறது. அவையே தற்போதைய ஆராய்ச்சியாளர்களின் துருப்புச் சீட்டாகவும் இருக்கிறது. அவை தொடர்பில் மேலும் பகுத்தாராயப்பட்டு வருகிறது எனவே சிலவேளை அவற்றில் புவியை ஒத்த கிரகம்(கள்) இருக்கலாம் என்பது ஆராய்வாளர்களின் நம்பிக்கை.

கிரகங்களை இந்த கெப்ளர் விண்கலம் எப்படி கண்டுபிடிக்கிறது தெரியுமா? இரவு வானில் தெளிவாக தெரியும் நட்சத்திம் திடீரென மறையும்போது வானில் மிக உயரத்தில் பறக்கும் விமானத்தின் ஓசைகள் எதுவுமின்றி அங்கே விமானம் செல்லுகிறது என்று நாம் சாதரணமாக எதிர்வுகூறுவது போலவே வானில் தெரிகின்ற எண்ணற்ற நட்சத்திரங்களை ஆராயும் போது எந்த நட்சத்திரத்தின் ஒளி எந்த அளவுக்கு எவவளவு நேரம் மங்குகிறது அல்லது மறைக்கப்படுகிறது என்பதை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து அனுப்புகிறது கெப்ளர்.

கெப்ளர் அனுப்புகின்ற அவ்வாறான படங்கள், தகவல்கள்களைக் கொண்டு நிபுணர்கள் விரிவாக ஆராய்ந்து குறித்த நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற கிரகங்கள் பற்றிக் கண்டறிகின்றனர்.

தற்போது கெப்ளர் விண்கலத்தின் பிரதான பணிகள் முடிவடைந்த போதிலும் மேலும் நான்கு ஆண்டுகள் அண்டவெளியில் தனது ஆராய்ச்சியைத் தொடரும் என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேற்றுக் கிரகவாசிகளை தேடி சூரியத்தொகுதிக்கு 'குட் பை' சொல்லுகிறது வொயஜர் - 1 

இதேவேளை 1977ஆம் ஆண்டு நாசாவினால் விண்ணுக்கு அனுப்பபட்ட வொயஜர்-1 என்ற ஆளில்லா விண்கலம் வியாழன், சனி ஆகிய கிரகங்களை நன்கு ஆராய்ந்து அரிய பல படங்களையும் அனுப்பி தனது கடமையை செவ்வனே நிறைவேற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேலதிக வேலையாக வேற்றுக்கிரகவாசிகளை தேடி சூரியனிலிருந்து சுமார் 1840 கோடி கிலோ மீட்டர் (இது  சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைப் போல 122 மடங்கு) வரை சென்று சூரியத்தொகுதிக்கு 'குட் பை' சொல்லியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வொயஜர்-1 விண்கலத்தில் ஒரு இறுவட்டு (CD) உள்ளது. இதில் ஞாயிற்றுத் தொகுதி குறித்த விடயங்களும் ஆண், பெண் உருவம், பூச்சிகள் விலங்குகளின் படங்கள், 35 மொழிகளிலான வாழ்த்துச் செய்தி மற்றும் பூமியிலுள்ள பல்வேறு வகையான இசை வடிவங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் வொயேஜரில் மூன்று அணுசக்தி மினகலங்கள் (Batteries) உள்ளதாகவும் இவை 2025ஆம் ஆண்டு வரை தாங்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆகவே அண்டவெளியிலுள்ள கோடிக்கணக்கான கிரகங்களில் எங்கோ ஒரு கிரகத்தில் எம்மை விட அறிவில் மிஞ்சிய அல்லது குறைந்த வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கிறார்கள் என நம்பிக்கை கொண்டுள்ள விஞ்ஞானிகள் இந்த விண்கலத்தின் மூலம் புவியையும் மனிதர்களையும் அவர்கள் அடையாளம் காண வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

எங்கோ ஒரு கிரகத்தில் வேற்றுக்கிரகவாசியின் குரல் கேட்கிறது. அதை நோக்கிய வொயஜரின் பயணமும் தொடர்கிறது. எம்மைத் தொடர்புகொள்ள அவர்களும் முயற்சிக்கிறார்கள் விரைவில் நல்ல செய்தி வந்து சேரும் என்ற விஞ்ஞானிகளின் நம்பிக்கை - வெற்றிபெறும் தேடலின் பயணமாக தொடர்கிறது.

- அமானுல்லா எம். றிஷாத்