Total Pageviews

Sunday, September 29, 2013

ராஜா ராணி - விமர்சனம்

கதை, திரைக்கதை, இயக்கம் - அட்லி
நட்சத்திரங்கள் - ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா, சத்தியராஜ், சத்யன்
இசை - ஜீவி. பிரகாஷ்
ஒளிப்பதிவு - ஜோர்ஜ். சீ. வில்லியம்ஸ்
எடிட்டிங் - அன்டனி எல். ரூபன்
தயாரிப்பு - பொக்ஸ் ஸ்ரூடியோ

ஆர்யா - நயன்தாரா திருமண அழைப்பிதழிலிருந்து விளம்பரமும் கூடவே எதிர்பார்ப்பையும் நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸையும் சுமந்து வந்திருக்கும் திரைப்படம் ராஜா ராணி.



ட்ரெய்லர் மற்றும் விளம்பரங்களில் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றி இருக்கிறதா? இல்லையா? என்றால் நிச்சயமாக நிறைவேற்றியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

Made for each other என்று யாரும் பிறக்கிறதில்லை. அது வாழ்ந்து காட்டுறதுலதான இருக்கிறது என்பதுதான் ராஜா ராணி படத்தின் கதை.

ஆர்யா - நயன்தாரா திருமணத்தில் படம் ஆரம்பமாகிறது. ஆரம்பத்திலிருந்தே ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் ஒத்துப்போகவில்லை. அது ஏன்? எதுக்காக என்கிற விடயத்தை திரைக்கதையில் சிறப்பாக சொல்லி அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அட்லி.

ஆர்யா - நயன் இருவரும் திருமணத்தின் பின்னர் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் வாழ்கிறார்கள். தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் ஆர்யாவும் சோகமாகவே இருக்கும் நயன்தாராவும் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள்.



தங்களது குடும்பத்திற்காக திருமணம் செய்தவர்கள் அதுவரையில் ஒருவருக்கொருவர் எதிரும் புதிராகவும் இருந்த இருவருது காதலும் பிளாஷ்பெக்கில் தெரியவருகிறது.

இதில் சந்தோஷமான நயன் - ஜெய் காதலில் ஜெய் இறக்கிறார். நயன் சோகத்தில் ஆழ்கிறார். கலகலப்பான ஆர்யா - நஸ்ரியா காதலில் நஸ்ரியாவை கண் முன் பறிகொடுத்து தவிக்கிறார் ஆர்யா.

இருந்தாலும் கண்களை கசக்கிக்கொண்டே இல்லாமல் ஆர்யா, நயன், சந்தானம், ஜெய், நஸ்ரியா, சத்யன் என அனைவரும் கலகப்பூட்டுகிறார்கள்.

ஆர்யா - நயன்தாரா காதல், ஆர்யா - நஸ்ரியா காதல், நயன்தாரா - ஜெய் காதல் இம்மூன்று காதலையும் அலுப்பில்லாமல் அசரடிக்க வைக்கிறது படம். மூன்று காதல் என்றாலும் உலகத் தரம் என்ற பெயரில் திரைக்கதையில் மண்டையை காயவிடாமல் தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.



கொமடியை எதிர்பார்த்துப்போன படத்தில் எதிர்பாராமல் நல்ல கதையையும் அதில் ஒரு நல்ல செய்தியையும் சொல்லி ரசிகர்களை ஆட்சி செய்கிறார்கள் ராஜா ராணி குழுவினர்.

அறிமுக இயக்குநர் அட்லி முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார். ஷங்கரின் உதவி இயக்குநர் என்பதை காட்டவோ என்னவோ அடிக்கடி சிவாஜி படத்தினை ஞாபகப்படுத்திறார். ஷங்கரைப்போலவே பாடல் காட்சிகளை ரசிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். திரைக்கதையும் சிறப்பாக நகர்த்தியிருக்கிறார்.

வலுக்கட்டாயமான சண்டைகள் இன்றி வலுவான திரைக்கதையில் அசத்துகிறார் அடலி. வெல்கம் டூ கொலிவூட்.



வசனங்களும் பல இடங்களில் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக ஒரு பொண்ணு அழுதா ஏமாத்தப்போறான்னு அர்த்தம். அதுவே ஒரு பையன் அழுததான்னா ஏமாந்துட்டான்னு அர்த்தம், யார் அழுதா கண்ணு வேர்க்குது,  நண்பன்ல ஏது நல்ல நண்பன் கெட்ட நண்பன் என்டாலே நல்லவன்தான் போன்ற வசனங்களுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது.

நாயகன் ஆர்யா கல்யாணத்துக்கு முன் பின் இரண்டிலும் உடல் மொழி வேறுபாட்டில் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். பல இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் அழவும் வைக்கிறார்.

நயன்தாரா நீண்ட இடைவெளியின் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸிலும் அசரடிக்கிறார். வந்து போகும் நாயகியாக இல்லாமல் ரெஜினாவாக பிரதிபலிக்கிறார்கள். சிரிப்பிலும் அழுகையிலும் அழகிலும் கொள்ளைகொள்கிறார்.



ஜெய் - நயன் ஜோடி பெரியளவில் பொருந்தவில்லை என்றாலும் ரசிக்கும்படி உள்ளது. ஜெய் சிரிக்க வைத்துச் செல்கிறார். ஆனால் கதையில் எதிர்பார்த்த முடிவாக இவரது பாத்திரம் அமைந்துள்ளது.

பல இடங்களில் இன்னுமொரு நயன்தாராவாகத் தெரிகிறார் நஸ்ரியா. நன்றாக நடிக்க வாய்ப்பு. சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். பிரதர் பிரதர் என ஆர்யாவையும் ரசிகர்களையும் கிறங்கடிக்கிறார். இனி பெண்கள் பிரதர் என அழைத்தால் பசங்க சந்தோஷப்படுவார்கள்.

சந்தானம் வழக்கம் போல பல இடங்களில் கலகலப்பூட்டுகிறார்கள். குணச்சித்திர கதாபாத்திரம் போல பின்னப்பட்டள்ளது. இவரது வசனங்கள் பலவற்றுக்கு அரங்கில் நல்ல வரவேற்பு.

சத்தியராஜ் தனது கதாபாத்திரத்தினை சிறப்பாக செய்துள்ளார். அளவாகவே வந்து போகிறார். சத்தியனும் அதுபோலவே.

ஜீ.வி. பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்களில் அசத்தல் ரகம். தேவையான இடங்களிலமைந்த பாடல்களால் யாரும் வெளியேறவில்லை. ஜோர்ஜின் ஒளிப்பதிவு படத்தினை மெருகூட்டுகிறது. ரூபனின் எடிட்டிங்கும் நச்சென்று இருக்கிறது. காட்சிகள் தொய்வாகத் தெரியவில்லை.

ஆர்யாவும் நயனும் ஏன் முதல் நாளிலிருந்தே முறைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது போன்ற ஓரு சில குறைகள் இருந்தாலும் நிறைகள் அதிகமாக உண்டு.

மொத்தத்தில் எதிர்பார்த்த கொமடியில் எதிர்பாராத திரைக்கதை மற்றும் கதையால் திருமணமானவர்கள், காதலர்கள் என அனைவரையும் குடும்ப ஆட்சி செய்கின்றது இந்த ராஜா ராணி.

-அமானுல்லா எம். றிஷாத்

இந்த விமர்சனம் மெட்ரோ நியூஸ் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
http://www.metronews.lk/article.php?category=entertainment&news=2326